இருமல் கஷாயம் செய்யத் தேவையான பொருட்கள்:
சிறு துண்டு சுக்கு, அதிமதுரம் 2 குச்சிகள், சித்தரத்தை 2 துண்டு, உடைத்த மிளகு 8, கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம் 2, வால்மிளகு ½ ஸ்பூன்.
இருமல் கசாயம் செய்வது எப்படி?
மேலே குறிப்பிட்ட பொருட்களை உரலிலோ, மிக்சியிலோ பொடித்து, 2 டம்ளர் தண்ணீரில் கொதிக்க விடவும். தண்ணீர் பாதியாக சுண்டியதும், வடிகட்டி பனங்கற்கண்டு, பால் சேர்த்துக் குடித்தால் இருமல் குணமாகும்.
வயிறு மந்தம் கஷாயம்
மழை, குளிர்காலங்களில் வயிறு மந்தமாகும். ஜரணமாவதற்கு சிரமமாகும்.
வயிறு மந்தம் கஷாயம் செய்வது எப்படி?
கொத்த மல்லி விதை 1 டேபிள் ஸ்பூன், சிரகம் 1 டேபிள் ஸ்பூன் மிக்சியில் பொடித்து இத்துடன் ½ ஸ்பூன் சுக்குப்பொடி சேர்த்து, ஒருடம்ளர் நீரில் கொதிக்க விடவும். பாதியாக வற்றியபின், அதில் பனங்கற்கண்டு சேர்த்து சூடாக குடித்தால் நிவாரணம் தரும், வயிறும் சுத்தமாகும். காலை, மாலை இருவேளையும் குடிக்கவும்.
தொண்டை பிரச்னைக்கான கஷாயம் செய்வது எப்படி?
துளசி 1 கைப்பிடி, ஓமவல்லி இலைகள் 6, மாவிலை 2, தூதுவளைக் கீரை 6, மணத்தக்காளி இலை ஒரு கைப்பிடி, இவைகளை நன்கு கழுவி, சிறிதாக நறுக்கவும். மிளகு, சீரகம் 1 ஸ்பூன் வறுத்து பொடிக்கவும். அனைத்தையும் நீரில் கொதிக்க விடவும். நன்றாக கொதித்தபின் 1 டம்ளர் கஷாயத்திற்கு, தேன் ஒரு ஸ்பூன்சேர்த்து மெல்ல அருந்தினால் தொண்டைகட்டு இருமல், தொண்டை வலி குணமாகும். குளிர்காலத்திற்கு ஏற்ற கஷாயம் இது.
எதிர்ப்புச் சக்தி கஷாயம் செய்வது எப்படி?
பனங்கற்கண்டு 1 டம்ளர், மிளகு 2 டேபிள் ஸ்பூன், சுக்குப் பொடி - 1 டேபிள் ஸ்பூன், அரிசித் திப்பிலி 10, ஏலம் 6, கிராம்பு 10, ஜாதிக்காய் துண்டு. இவை அனைத்தையும் (பனங்கற்கண்டு தவிர) மிக்சியில் கரகரப்பாக பொடிக்கவும். 2 டம்ளர் தண்ணீரில் பனங்கற்கண்டை போட்டு, கொதிக்க வைத்து வடிகட்டி, மீண்டும் சூடு செய்து பொடியை போட்டு இரண்டு நிமிடங்கள் கிளறி கொதிக்க விடவும். ஆறியபின் கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஃபிரிட்ஜில் வைக்கலாம். குடிக்கும்போது வெதுவெதுப்பான நீரில், ¼ டம்ளர் பானகம் விட்டு குடிக்கலாம். நோய்களை சமாளிக்கும் நிவாரண கஷாயம் இது.